டெல்லி: “இந்தியாவும் இஸ்ரேலும் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றன” என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கான இந்தியாவின் தூதர் நோர் கிலோனனை (Naor Gilon) நடிகை கங்கனா ரனாவத் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது இஸ்ரேல் - ஹாமஸ் மோதல் குறித்து பேசிய அவர், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள கங்கனா, “இன்றைக்கு உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவும் இஸ்ரேலும் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றன. நேற்று டெல்லியில் ராவணனை எரிக்க சென்றபோதே, இன்றைய நவீன ராவணனான ஹமாஸை தோற்கடிக்க போராடும் இஸ்ரேல் தூதரகத்துக்குச் செல்லவேண்டும் என நினைத்தேன். சிறு குழந்தைகளும் பெண்களும் குறிவைக்கப்படுவது மனதை உலுக்குகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றிபெறும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேலுக்கான இந்தியாவின் தூதர் நோர் கிலோன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு வந்திருந்த நடிகை கங்கனா டெல்லியில் உள்ள தூதரகத்துக்கு வந்து சந்தித்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கங்கனா மட்டுமல்லாமல், பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய நண்பர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.