“இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” - அமிதாப் பச்சன் குறித்து ரஜினி நெகிழ்ச்சிப் பகிர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: ரஜினி நடிக்கும் 170வது படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ள நிலையில், அமிதாப் பச்சன் உடனான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். இதில். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றன. வரும் 28ஆம் தேதி வரை அங்கு ஷூட்டிங் நடக்கிறது.

இந்த நிலையில் அமிதாப் பச்சன் உடனான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரஜினிகாந்த், ”33 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய வழிகாட்டி, ஆளுமை, அமிதாப் பச்சனுடன், லைகா தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கும் என்னுடைய 170வது படத்தில் மீண்டும் பணிபுரிகிறேன். என்னுடைய இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE