நீர்க்குமிழி: கே.பாலசந்தருக்கு கிடைத்த முதல் ரசிகர் கடிதம்!

By செய்திப்பிரிவு

எம்.ஜி.ஆரின் ‘தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதி திரைப் பயணத்தைத் தொடங்கிய கே.பாலசந்தர் இயக்குநராக அறிமுகமான படம், ‘நீர்க்குமிழி’.

அந்த பாலாஜி மருத்துவமனையின் 7-வது வார்டில் சிகிச்சைப் பெறும் புற்று நோயாளி சேது (நாகேஷ்), அந்த ஏரியாவை ஜாலியாக வைத்திருக்கிறார். தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் (மேஜர் சுந்தரராஜன்) தனது மகள் டாக்டர் இந்திராவை (சவுகார் ஜானகி), மருத்துவ ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்ப நினைக்கிறார். அவரோ, தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கால்பந்தாட்ட வீரர் அருணை (வி.கோபாலகிருஷ்ணன்)காதலிக்கிறார். இதனால் அமெரிக்கா செல்வதைத் தவிர்க்கிறார். தனது இறுதிநாள் குறிக்கப்பட்டதை அறியும் நாகேஷ், கடைசி நேரத்தில் ஏதாவது நல்லது செய்யலாம் என சவுகார் காதலுக்கு உதவுகிறார். ஆனால் எல்லாம் நீர்க்குமிழியாகிறது என்பதுதான் படம்.

இது ஏழாம் நம்பர் வார்டின் கதை என்ற குரலோடுதான் படம் தொடங்கும். சோகமான படம்தான். அதை ஜாலியாகக் கொண்டு சென்று இறுதியில் கலங்க வைத்திருப்பார் கே.பி. துறுதுறு நாகேஷின் நடிப்பும் டைமிங் காமெடியும் இந்தப் படத்தின் பலம்.

கே.பாலசந்தரின் மேடை நாடகங்களுக்கு இசை அமைத்து வந்த வி.குமார், இந்தப் படத்தின் மூலம்தான் இசை அமைப்பாளர் ஆனார். இவர் மூலமாகத்தான், தயாரிப்பாளரும் இயக்குநருமான திருமலை பிலிம்ஸ் ஏ.கே.வேலனைச் சந்தித்தார் பாலசந்தர். அப்போது ‘நீர்க்குமிழி’ நாடகம் அரங்கேற்றப்படவில்லை. கதையைக் கேட்ட ஏ.கே.வேலன், நாடகம் மேடையேறும் முன்பே, சினிமாவாக்க முன் வந்தார். அதோடு, ‘நீங்கள்தான் இயக்க வேண்டும்’ என்றும் சொன்னார் கே.பியிடம். அவருக்கு இன்ப அதிர்ச்சி.

“படம் இயக்க எனக்கு பயம். திரைக்கதை, வசனம் மட்டும் எழுதி தர்றேன்” என்ற பாலசந்தரிடம், “அது பெரிய விஷயமில்லை. நாடகத்தை இயக்கிய உங்களால் படம் இயக்க முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் அவர். பிறகு நாடகம் அரங்கேற்றப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

பின்னர், பாடல் பதிவுடன் படப்பிடிப்பு தொடங்க வேண்டும். உவமைக் கவிஞர் சுரதா எழுதி சீர்காழி சவுந்தர்ராஜன் பாடிய ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல்தான் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், பைனான்சியர் காலை வாரியதால் ரெக்கார்டிங் கேன்சல்! ஆரம்பமே இப்படியானதுக்கு, படத்தின் தலைப்பும் பாட்டின் பல்லவியும் தான் காரணம்என்றார்கள் சினிமா சென்டிமென்ட்டில் ஊறியவர்கள். அதனால் நண்பர்கள் தலைப்பை மாற்றச் சொன்னார்கள். மறுத்துவிட்டார் கே.பி.

பிறகு ஷூட்டிங் தொடங்கி முடிந்து படம் ஹிட். அதற்கு முன் பிராசஸிங்கில் படத்தைப் பார்த்த ஏவிஎம் செட்டியார், கே.பாலசந்தரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினார். கே.பி.க்கு கிடைத்த முதல் ரசிகர் கடிதம் அதுதான் என்று அவரே கூறியிருக்கிறார்.

அப்போது பிரபலமாக இருந்த நிமாய் கோஷ், ஒளிப்பதிவு செய்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் இதில் இணை இசை அமைப்பாளார்.

வி.குமார் இசையில் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, ‘கன்னி நதியோரம்’, ‘நீரில் நீந்திடும் மீனினமே’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

‘கன்னி நதியோரம்’ பாடலில் ஜெயந்தியுடன் நாகேஷ் ஆடும் அசத்தலான நடனம் அதிகம் ரசிக்கப்பட்டது. பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் நடன இயக்குநராக அறிமுகமான பாடல் இதுதான்!

1965-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தப் படம் வெளியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE