நானி நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா மீண்டும் நானியுடன் அடுத்த படத்துக்காக கைகோக்கிறார். இந்தத் திரைப்படத்தை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவி வி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
‘நானி31’ என அழைக்கப்படும் இப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் பூஜையுடன் அக்டோபர் 24-ம் தேதி தொடங்குகின்றன. நானி நடிப்பில் அடுத்தாக ‘ஹாய் நான்னா’ திரைப்படம் டிசம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.