3 பாகங்களாக உருவாகும் மகாபாரதக் கதை 

By செய்திப்பிரிவு

இந்தியில் சாக்லேட், ஹேட் ஸ்டோரி, புத்தா இன் டிராபிக் ஜாம் உட்பட சில படங்களை இயக்கியவர் விவேக் அக்னிகோத்ரி. இவர், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் மூலம் பிரபலமானார். அடுத்து, ‘தி வேக்ஸின் வார்’ படத்தை இயக்கி இருந்தார். இவர் மகாபாரத கதையை இயக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட எழுத்தாளரான எஸ்.எல்.பைரப்பாவின் கன்னட நாவல் பர்வா (பருவம்)வைத் தழுவி இந்தப் படம் உருவாகிறது. ‘பர்வா- அன் எபிக் டேல் ஆஃப் தர்மா’ என்று தலைப்பு வைத்துள்ள விவேக் அக்னிகோத்ரி, ‘மகாபாரதம் வரலாறா, புராணமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். 3 பாகங்களாக உருவாகும் இதில் நடிப்பவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஏற்கெனவே, நடிகர் ஆமீர்கான் மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்ட படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இயக்குநர் ராஜமவுலியும் மகாபாரதத்தைப் படமாக்க ஆசை இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அது 10 பாகங்கள் கொண்ட படமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவலின் அடிப்படையில் உருவாக இருந்த மகாபாரதக் கதையில் மோகன்லால் நடிக்க இருந்தார். இயக்குநர் நிதேஷ் திவாரி, ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணக் கதையைத் திரைப்படமாக்க இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE