“லியோ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது”- தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது என்று அதன் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நேற்று (அக்.19) திரையரங்குகளில் வெளியானது. விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த சிக்கலால் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே சென்னையின் பல திரையரங்குகளில் படம் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டில் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் லலித்குமார், படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘லியோ’ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை நெருங்காது. காரணம் நாங்கள் இந்தி மார்க்கெட்டில் இருந்து அவ்வளவு வசூலை எதிர்பார்க்கவில்லை. படத்தைப் பார்க்க தமிழ்நாட்டிலிருந்து 2 லட்சம் பேர் வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதிகாலை 4 மணி காட்சிக்கு நிறைய முயற்சி செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை.

மற்ற மாநிலங்களிலும் ஒரே மாதிரியான நேரத்தில் வெளியிடுமாறு விஜய் கூறினார். ஆனால் ரசிகர்களின் கொண்டாட்டத்தை நான் கெடுக்க விரும்பவில்லை. ’லியோ’ படத்தை ரஜினி பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டினார். ’மாஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு விஜய்க்கு கார் ஒன்றை பரிசளிக்க விரும்பினேன். இதனை அவரிடம் சொன்னபோது, ‘சம்பளம் கொடுக்கிறீர்கள் அல்லவா? அதுபோதும்’ என்று மறுத்துவிட்டார். இவ்வாறு லலித்குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE