“விரைவில் ‘தங்கலான்’ சம்பவம்” - ஜி.வி.பிரகாஷ் ட்வீட்

By செய்திப்பிரிவு

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரமும் இணையும் படம் ‘தங்கலான்’. அதிக பொருட்செலவில் வரலாற்று பின்னணியுடன் உருவாகிவரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா படத்தை தயாரிக்கிறார். பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப்பில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தங்கலான் சம்பவம் விரைவில். மிரட்டும் டீஸர் விரைவில் வெளியாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE