தேசம் vs குடும்பம்: சல்மான் கானின் ‘டைகர் 3’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

மும்பை: சல்மான் கான், கேத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள ‘டைகர் 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சல்மான் கான் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான ‘ஏக் தா டைகர்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘டைகர் 3’ வரும் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. கேத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்ஸில் ஒன்றாக உருவாகியுள்ளது. இதற்கு முன் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ படமும் இதே யுனிவர்ஸில் இருந்து வெளியாகியிருந்தது. அதில் சல்மான் கான் ஒரு கேமியோ ரோல் செய்திருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: தன் மனைவி கேத்ரீனா கைஃப் மற்றும் மகனுடன் அமைதியான வாழ்க்கை வாழும் ‘டைகர்’ சல்மான் கானிடம் நாட்டைக் காக்கும் புதிய பொறுப்பு வழங்கப்படுகிறது. சல்மான் கானால் பாதிக்கப்பட்ட இம்ரான் ஹாஷ்மி தற்போது புதிய வில்லனாக உருவெடுத்து பழிவாங்குகிறார். அவரிடமிருந்து நாட்டையும், குடும்பத்தையும் காப்பதற்காக சல்மான் கான் போராடுவதுதான் கதை என்பதை ட்ரெய்லரில் தெரிந்து கொள்ளமுடிகிறது.

கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, அதிரடி ஆக்‌ஷன் என தொழில்நுட்ப அம்சங்கள் ட்ரெய்லரில் சிறப்பாக வந்துள்ளன. ஒரு காட்சியில் ‘உன் உதவி தேவை’ என்று யாரிடமோ சல்மான் கான் போனில் பேசுகிறார். அநேகமாக அது ‘பதான்’ ஷாருக்கானாக இருக்கலாம்.

’டைகர் 3’ தமிழ் ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE