ODI WC 2023 | இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் காணும் ரஜினி, அமிதாப்!

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.

வரும் சனிக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தப் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அகமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

அந்தந்த துறைகளில் சிறந்த விளங்குபவர்களுக்கு பிசிசிஐ சார்பில் கோல்டன் டிக்கெட்டுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோருக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கோல்டன் டிக்கெட்டுகளை வழங்கி கவுரவித்தார். இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டியை நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோர் நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.

சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் தொடங்கும் இந்தப் போட்டிக்கு முன்னதாக 12.40 மணி அளவில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. 1.10 மணி அளவில் இசை நிகழ்ச்சி நிறைவடைகிறது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தும், அமிதாப் பச்சனும் இணைந்து ‘ரஜினி 170’ படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE