லைகாவுக்கு செலுத்த வேண்டிய பணத்தை தராதது ஏன்? - விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஐடிபிஐ, ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி உள்ளிட்ட ஆறு வங்கிக் கணக்குகளின் விவரங்களும், சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அசையா சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் தாக்கல் செய்த வங்கி பரிவர்த்தனையின்படி 80 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளன. அவரது வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் வேண்டுமென்றே தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை விஷால் செலுத்தாமல் இருக்கிறார். இதுகுறித்து மெமோ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் பாதி தொகையையாவது டெபாசிட் செய்ய விஷாலுக்கு உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.

அப்போது விஷால் தரப்பு வழக்கறிஞர், இதுகுறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “பணத்தை ஏன் இன்னும் திரும்ப செலுத்தாமல் இருக்கிறீர்கள்? பணத்தை செலுத்த வேண்டியது தானே?” என கேள்வி எழுப்பினார். அதற்கு விஷால் தரப்பு வழக்கறிஞர், பணத்தை செலுத்த தாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்கள் தான் பேச்சுவார்த்தைக்கு (Mediation) முன்வருவதில்லை என கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE