நடிகர் நாசரின் தந்தை மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் நாசரின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாசர் சினிமா உலகில் நுழைய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அவரது தந்தை மொகபூப் பாட்ஷா. தந்தையின் ஆசைக்காகவே நாசர் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டார். வாய்ப்புகள் கிடைக்கத்தால் ஹோட்டல் வேலைக்குச் சென்ற நாசர் மீண்டும் சினிமா உலகில் நுழைய தந்தையே காரணமாக இருந்தார்.

நடிகர் நாசரின் தந்தை மொகபூப் பாட்ஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக இன்று தனது வீட்டில் காலமானார். செங்கல்பட்டு தட்டான்மலை தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அந்த வீட்டிலேயே அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் இன்று மாலை 6 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவுக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்துவரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசரின் தந்தை பாட்ஷா, வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன். தந்தையின் மறைவால் வாடும் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE