“தெரியாமல் நடந்துவிட்டது” - விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விக்னேஷ் சிவன்

By செய்திப்பிரிவு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் இடையே மனக்கசப்பு இருப்பது தொடர்பான பதிவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் லைக் செய்திருந்த நிலையில், அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களே... குழப்பத்துக்கு மன்னிக்கவும். வீடியோவில் என்ன பேசப்பட்டிருக்கிறது என்பதை பார்க்காமலேயே அது லோகேஷ் கனகராஜின் நேர்காணல் என்பதால் அந்த வீடியோவை லைக் செய்தேன். ஏனெனில், நான் லோகேஷ் படங்களின் மிகப்பெரிய ரசிகன்.

அதேபோல், அவரது நேர்காணல்களும், அவர் பேசும் விதமும் எனக்கு பிடிக்கும். உணர்ச்சிவசப்பட்டு அந்த நேர்காணலில் இருந்த லோகேஷ் கனகராஜின் படத்தை பார்த்து லைக் செய்துவிட்டேன். அது என்னுடைய மோசமான தருணம். வீடியோவில் என்ன பேசப்பட்டுள்ளது என்பதை பார்க்கவில்லை. ட்விட்டரில் இருந்த கருத்தையும் படிக்கவில்லை. நான் கொஞ்சம் கவனமுடன் இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.

இது என்னுடைய தரப்பில் நடந்த சில்லியான தவறு. உலகம் முழுவதும் உள்ள தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அக்டோபர் 19-ஆம் தேதி படத்தை காண நானும் ஆவலுடன் இருக்கிறேன். என்னுடைய இந்த தவறை பொருட்படுத்தாமல் இதற்கு மேலும் இதில் கருத்து தெரிவிக்க நேரத்தை செலவிட வேண்டாம். நானும் விஜய்யின் ‘லியோ’ படத்தின் மிகப்பெரிய ரிலீஸ்க்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன். ‘லியோ’வை கொண்டாட தொடங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE