பிருத்விராஜ் - மோகன்லாலின் ‘எம்புரான்’ படப்பிடிப்பு அக்.5-ல் தொடக்கம் - அறிமுக வீடியோ

By செய்திப்பிரிவு

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5-ம் தேதி தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அறிவிப்பு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார். ‘லூசிஃபர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார்.

அதன்படி இரண்டாம் பாகத்துக்கு ‘எம்புரான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சினிமாவாக அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் பான் இந்தியா முறையில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ‘லூசிஃபர்’ படத்தின் ட்ரெய்லரை ரீ-எடிட் செய்து அதனையே அறிவிப்பு வீடியோவாக்கி வெளியிட்டுள்ளனர். லாஞ்ச் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE