ஹைதராபாத்: ‘பாகுபலி’க்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற, மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபாஸின் மெழுகு சிலைஅமைக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள தென்னிந்திய நடிகரின் முதல் மெழுகு சிலை அது என ரசிகர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் மைசூர் அருங்காட்சியகத்தில் சமீபத்தில் ‘பாகுபலி’பிரபாஸின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. அந்தச் சிலை பிரபாஸ் போலவே இல்லை என்றும் நீண்ட தலைமுடியுடன் கூடிய டேவிட் வார்னர் என்றும் அமரேந்திர ஜான் விக் பாகுபலி என்றும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டாகூறும்போது, “இதை அனுமதி பெறாமல் செய்துள்ளனர். குறைந்தபட்சம் எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. இந்தச் சிலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையடுத்து அந்த அருங்காட்சியகத்தின் உரிமையாளர் பாஸ்கர் கூறும்போது, ‘யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. அதனால் நாங்கள் அந்தச் சிலையை எடுத்துவிட முடிவு செய்துள்ளோம்” என்றார்.
இங்கு, ரஜினிகாந்த், ராஜ்குமார், விஷ்ணுவர்தன், புனித் ராஜ்குமார். சார்லி சாப்ளின் உட்பட புகழ் பெற்றவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.