கொச்சி: தமிழில், அழகிய தீயே, ராமன் தேடிய சீதை, ஆடும் கூத்து உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை நவ்யா நாயர். சுங்கத் துறை கூடுதல் ஆணையர் சச்சின் சாவந்த், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நடிகை நவ்யா நாயருக்கு அவர் தங்க நகைகளைப் பரிசாக வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ்யா நாயரை சந்திப்பதற்காக சச்சின் சாவந்த் 8 முறை கொச்சிக்குச் சென்றுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்தநவ்யா நாயர், “சச்சின் தனது பிறந்தநாளின் போது என் குழந்தைகளுக்குத் தங்க நகைகளைப் பரிசளித்தார். அவர் குருவாயூர் கோயிலுக்குச் செல்ல நான் ஏற்பாடு செய்தேன். அவர்நண்பர் மட்டுமே” என்று கூறியிருந்தார்.
இந்தப் பிரச்சினை காரணமாக நடிகை நவ்யா நாயர், தனது கணவர் சந்தோஷ் மேனனை பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. அதை மறுக்கும்விதமாக, கணவர், மகன் சாய்கிருஷ்ணா மற்றும் மாமியாருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டு, அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்