ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க பிடிக்கும்: சமந்தா

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து கடந்த மாதம் வெளியான ‘குஷி’ படம் வரவேற்பைப் பெற்றது. தசை அழற்சி நோயிலிருந்து மீண்டுள்ள சமந்தா, இப்போது நடிப்புக்கு இடைவெளி விட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இன்னும் சில மாதங்கள் அவர் ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், அவர் சருமம் தெளிவாக இருப்பது பற்றி கேட்டார். அதற்குப் பதிலளித்த அவர், ‘‘உண்மையில் தசை அழற்சிக்காக ஸ்டீராய்டுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அது என் சருமத்தை மாற்றிவிட்டது. தோள் பளபளப்பாக இல்லை, நீங்கள் என்னை ஃபில்டரில் தான் பார்க்கிறீர்கள்’’ என்று தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், சிட்டாடெல் வெப் தொடரில் கடுமையான ஆக்‌ஷன் காட்சியில் பங்கேற்றுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

“ஆக்‌ஷன் காட்சியில் நடிப்பது எனக்குப் பிடிக்கும். அதுபோன்ற காட்சிகளில் நடிக்கும்போது உற்சாகமாகிவிடுவேன். அது ஏன் என்று தெரியவில்லை. சிட்டாடெல் தொடரில் ஆக்‌ஷன் காட்சியில் நடித்துள்ளேன். அது கடினமாக இருந்தது. இருந்தாலும் அந்தச் சவாலை நேசித்தேன். அந்தக் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன்” என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE