கருந்துளை பின்னணியில் முதல் இந்திய திரைப்படம்

By செய்திப்பிரிவு

சென்னை: எம்.ஆர். புரொடக் ஷன்ஸ் மற்றும் வணக்கம் தமிழா மூவிஸ் சார்பில் மகேஷ் ரம்யா, ஆயிஷா சாதிக் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரெட் அண்ட் ஃபாலோ’. சாதிக் இதை இயக்கி இசை அமைத்துள்ளார். கருணாகரன், பாலசரவணன், யாஷிகா ஆனந்த், ஜி.பி.முத்து, அனிதா சம்பத் உட்பட பலர் நடித்துள்ளனர். ஃபேன்டஸி காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இதன் கதையை ‘ஜீவி’பாபு தமிழ் எழுதியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

படம் பற்றி இயக்குநர் ‘வணக்கம் தமிழா’ சாதிக் கூறியதாவது: அடிப்படையில் நான் இசை அமைப்பாளர். ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கியுள்ளேன். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன். இந்தக் கதை கொஞ்சம் வித்தியாசமானது. எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சக்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் பகுதி கருந்துளை (Black Hole). அந்தப் பின்னணியில் சொல்லப்படும் ஃபேன்டஸி படம் இது. இதில் மாட்டிக்கொள்ளும் 3 பேர் பற்றிய கதையை வித்தியாசமாகச் சொல்கிறோம். கருந்துளைப் பின்னணியில் உருவாகும் முதல் இந்திய திரைப்படம் இது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் புது அனுபவத்தைக் கொடுக்கும். படத்தில் 4 பாடல்கள் இருக்கின்றன. ஒரு பாடலை பிரேம்ஜி பாடியிருக்கிறார்.

இவ்வாறு சாதிக் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE