சென்னை: ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியை அடுத்து, டிக்கெட் பெற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியாதவர்களுக்கு எக்ஸ் தளம் வாயிலாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது: “அன்புள்ள சென்னை மக்களே, டிக்கெட் வாங்கியும், சில துரதிர்ஷ்டவசமான சூழல்களால் உள்ளே நுழையமுடியாதவர்கள், தயவு செய்து உங்களுக்கு டிக்கெட் பிரதியை arr4chennai@btos.in என்ற மெயில் ஐடிக்கு உங்களுடைய குறைகளை குறிப்பிட்டு அனுப்பவும். எங்களுடைய குழுவினர் முடிந்தவரை உடனடியாக பதிலளிப்பார்கள்.” இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.
» “ட்வீட் போடுவது அட்மின்” - பயோவை மாற்றினாரா ஏ.ஆர்.ரஹ்மான்?
» சலூன் நாற்காலி.. ரத்தம் தோய்ந்த கத்தி: விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு