‘தளபதி’ன்னு தான் சொல்லணும்: விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட அட்வைஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: பனையூரில் நடைபெற்று வரும் விஜய் மக்கள் இயக்க மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் பெண் நிர்வாகிகளிடம் ‘விஜய்யை தளபதி என்றுதான் சொல்லவேண்டும். பெயரை சொல்லக் கூடாது’ என்று அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறிய காணொலி வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில் தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று (செப்.9) சென்னை - பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தபோது, ‘நாங்கள் ஆசைப்படுவது ஒன்றே ஒன்றுதான். விஜய்யை நாங்கள் நேரில் சந்திக்க விரும்புகிறோம். அவர் உங்களுக்கு வேண்டுமானால் தலைவர் இருக்கலாம். எங்களுக்கு அவர் என்றைக்குமே உடன்பிறவா சகோதரர்தான். நான் சிறுவயதில் இருந்தே விஜய் ரசிகை’ என்று தெரிவித்தார். அப்போது இடைமறித்த புஸ்ஸி ஆனந்த், ‘தலைவனின் பெயரை எப்போதுமே சொல்லக் கூடாது. ‘தளபதி’ என்றுதான் சொல்லவேண்டும்” என்று அறிவுரை கூறினார். இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் 'இன்னும் ஆரம்பிக்கவே இல்லை... அதற்குள் இப்படியா?’ என்று விமர்சித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE