“நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்தபோது இப்படி நிகழ்ந்துவிட்டது” - மாரிமுத்து மறைவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: வாழ்வில் அவர் நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் இப்படி நிகழ்ந்தது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மாரிமுத்துவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இயக்குநர் வசந்திடம் நான் உதவி இயக்குநராக இருக்கும்போது அவர் என்னுடைய சீனியர். நல்ல மனிதர். பலரையும் சிரிக்க வைக்கும் திறமை படைத்தவர். வாழ்வில் அவர் நன்றாக வந்துகொண்டிருந்தபோது இந்த நேரத்தில் இப்படி நிகழ்ந்துவிட்டது என நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. இறைவன் இந்த நேரத்தில் அவரதுகுடும்பத்துக்கு ஏன் இப்படியொரு சூழலை கொடுத்தார் என தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆகின. இதற்கு முன்பே இவர் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ’கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். ’பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன. சமீபத்தில் அவரது பேட்டிகள், பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரது இறப்புச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE