நடிகர் மாரிமுத்து மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் மாரிமுத்து மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில், “பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். நடிகர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆகின. இதற்கு முன்பே இவர் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ’கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். ’பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. சமீபத்தில் அவரது பேட்டிகள், பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரது இறப்புச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE