தமிழ் சீரியலை சமூக வலைதளங்களில் பேசுபொருளாக்கிய மாரிமுத்து - நெட்டிசன்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் மறைவு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் ’எதிர்நீச்சல்’. மற்ற சீரியல்களைக் காட்டிலும் இந்த சீரியலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். இந்த சீரியலில் வரும் காட்சிகள், வசனங்கள் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுவதுண்டு. அதற்கு மிக முக்கிய காரணம் இந்த சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாரிமுத்து.

ஆணாதிக்கமும், அதிகாரத் தொனியும் கொண்ட இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார் மாரிமுத்து. இவர் பேசும், ‘ஏம்மா ஏய்’ என்ற வசனம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பான மீம்களும் அதிகமாக பகிரப்பட்டன. சமீபத்தில் தனியார் தொலைகாட்சியில் நடந்த ஒரு விவாத நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் குறித்து மாரிமுத்து பேசிய கருத்துகள் சர்ச்சையாகின.

மேலும் தனது மனதில் பட்ட கருத்துக்களை எந்தவித ஒளிவு மறைவுமின்றி பேட்டிகளில் துணிச்சலாக முன்வைத்து வந்தார். இவர் பேசும் காணொலிகள் ரீல்ஸ்களாக இணையத்தில் எடிட் செய்யப்பட்ட பகிரப்பட்டன. இந்த நிலையில் 56 வயதாகும் மாரிமுத்துவின் திடீர் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவர் பேசிய காணொலிகள், அவரது பேட்டிகளை பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியலை தனது கதாபாத்திரம் மூலம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக்கியவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE