பெங்களூர்: தான் மாரடைப்பால் இறந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் நடிகை ரம்யா தான் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில் சிலம்பரசன் நடித்த ‘குத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா. திவ்யா ஸ்பந்தனா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், தொடர்ந்து ’கிரி’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘’சிங்கம் புலி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். ‘பொல்லாதவன்’ மற்றும் ‘வாரணம் ஆயிரம்’ படங்களில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
நடிப்பிலிருந்து விலகிய அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். 2013ஆம் ஆண்டு கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில், நடிகை ரம்யா இன்று (செப்.06) மாரடைப்பால் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தற்போது ஜெனீவாவில் இருக்கும் நடிகை ரம்யாவிடம், இந்த வதந்தி குறித்து விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், தான் ஜெனீவாவில் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தனக்கு தற்போது தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
» “நாம் பாரதீயர்கள், இந்தியர்கள் அல்ல” - கங்கனா ரனாவத் பகிர்வு
» “உங்களால் ரூ.8 கோடி இழப்பு” - விஜய் தேவரகொண்டாவை விமர்சித்த விநியோகஸ்தர்
முன்னதாக, ரம்யாவின் தோழியும் பத்திரிகையாளருமான சித்ரா சுப்ரமணியம் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில் தற்போது ரம்யாவுடன் பேசியதாகவும், அவர் நாளை ஜெனீவாவில் இருந்து ப்ரேக் செல்வதாகவும் அதன் பிறகு அவர் பெங்களூரூ திரும்புவார் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ரம்யா ‘விரைவில் நம்ம ஊரில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.