விஜய் முதல் விஜயகாந்த் வரை - சினிமாவை அலங்கரித்த ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தது என்ன?

By கலிலுல்லா

ஆசிரியர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திரையுலகில் ஆசிரியர் கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

நம்மவர்: 1994-ல் வெளியான இப்படத்தில் வி.சி.செல்வம் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். உண்மையில் இப்படியான ஒரு ஆசிரியர் நமக்கும் இருந்தால் நன்றாக இருக்குமே என யோசிக்கும் அளவுக்கான ஒரு புரொஃபசர். அவரை எதிர்க்கும் மாணவனைக்கூட நேர்வழிப்படுத்த முயலும் வி.சி.செல்வம் தேர்ந்த ஆசிரியருக்கான அடையாளமாக இன்றளவும் திகழ்கிறார்.

நண்பன்: 2012-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான இந்தப் படம் கல்விச் சீர்திருத்ததை பேசியது. வெறும் மனப்பாடமாக மட்டுமே இல்லாமல் புரிந்து வாசிக்க வேண்டிய தேவையை படம் உணர்த்தியது. இதில் விருமாண்டி சந்தானம் (எ) வைரஸ் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருப்பார். கட்டுகோப்பான ஒழுக்கமான ஆசிரியர். ‘லைஃப் இஸ் ஏ ரேஸ்..ரன் ரன் ரன்’ என ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். முதலில் வருபவர்களை மட்டுமே இந்த உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும் என்ற மனப்பான்மை கொண்டவர். இந்த நிலையிலிருக்கும் அந்த கதாபாத்திரம் இறுதியில் கற்றலுக்கான தேவையின் மாறுபாடுகளை உணர்ந்துகொள்ளும். தேர்ந்த நடிப்பில் மிரட்டியிருப்பார்.

மாஸ்டர்: ஜே.டியை உங்களில் யாராலும் மறக்க முடியாது. பெண்களுக்கான உடை சுதந்திரம் முதல் அவர்கள் அதிகாரம் பெற வேண்டியது வரை முற்போக்கு கதாபாத்திரத்தில் விஜய் அதகளம் செய்திருப்பார். மது அருந்தி வகுப்புக்கு வரும் ஆசிரியர் என்பது மட்டும் நெருடலைக்கொடுத்தாலும், மாணவர்களிடம் அவரது அணுகுமுறை மற்ற ஆசிரியர்களிடமிருந்து வித்தியாசபட்டிருக்கும். சொல்லப்போனால் ‘நம்மவர்’ கமல் கதாபாத்திரத்தின் மறு ஆக்கம் தான் ‘ஜேடி’.

ரமணா: 2002-ல் வெளியான இப்படத்தில் ரமணா என்ற விஜயகாந்த் கதாபாத்திரம் ஒரு ஆசிரியர் அரசியல் தளத்திலும் இயக்கவேண்டியது குறித்து பேசியது. ரமணாவை பொறுத்தவரை அவர் மாணவர்களுக்கு வெறுமனே பாடங்களை சொல்லிக்கொடுப்பவராக மட்டுமல்லாமல் வகுப்பறை எல்லையைத் தாண்டி மாணவர்களின் அறிவு விரிவடைய வேண்டியதை வலியுறுத்தியவர். அரசியல் தளத்தில் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்த வேண்டியதை சொல்லிக்கொடுத்தார்.

ராட்சசி: 2019-ம் ஆண்டு ஜோதிகா நடித்தில் வெளியான இப்படத்தில் கீதா ராணி ஆசிரியர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதையில், அரசு ஆசியர்களுக்கு முன்மாதிரியான கதாபாத்திரம் கீதா ராணி உடையது. மாணவர்களுக்களிடையே நெகிழ்வுத்தன்மை வேண்டும் என்பதையும் அழுத்தமாக சொல்லும் கதாபாத்திரம்.

சாட்டை: தயாளன். மாணவர்களை அவர்கள் இடத்தில் நின்று புரிந்துகொள்ளும் ஆசிரியர். ‘பசங்கனா அப்டி தான் இருப்பாங்க’ என நம்புபவர். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கும் தயாளன் அதீத அறிவுரைகள் மூலம் வழிநடத்தக்கூடியவர். சமுத்திரகனி ஏற்றிருந்த இந்தக் கதாபாத்திரம் அவருக்கான பெரும் அடையாளத்தை தேடிதந்தது.

பேராண்மை: ஜெயம்ரவியின் ‘துருவன்’ கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதாக மறக்க முடியாத அளவுக்கு வடிவமைத்திருப்பார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். கல்லூரியில் மாணவர்களிடையே ‘அரசியல் பொருளாதாரம்’ குறித்து துருவன் விளக்கும் காட்சி அழுத்தமாக எழுதப்பட்டிருக்கும். தன்னை மாணவர்கள் இகழ்ந்த போதிலும் அவர்களுக்கு தேவையான போதனையையும், கல்வியையும் கற்றுக்கொடுப்பதில் ஒருபோதும் சோர்ந்துவிடமாட்டார். ஒரு ஆசிரியரின் கடமையை எந்த சமரசமும் இல்லாமல் பதிவு செய்திருக்கும் துருவன் கதாபாத்திரம் முக்கியமானது மட்டுமல்லாமல் முன்னுதாரணமானதும் கூட.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE