“எங்களுக்குள் எந்த சர்ச்சையும் இல்லை” - தேசிய விருதுகள் குறித்து ரானா டகுபதி

By செய்திப்பிரிவு

“நடிகர்களுக்குள் எந்த சர்ச்சையும் இல்லை” என நடிகர் ரானா டகுபதி பேசியுள்ளார்.

அண்மையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், தயாரிப்பாளருமான ரானா டகுபதி கலந்துகொண்டார். அவரிடம் ரசிகர் ஒருவர், “அல்லு அர்ஜுன் தேசிய விருது வென்றதற்கு நானி ஏன் விமர்சனம் செய்தார். இருவருக்குள்ளும் இருக்கும் போட்டிதான் காரணமா?” என கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக பதிலளித்த ரானா டகுபதி, “எல்லோருக்கும் கருத்துரிமை உண்டு. உங்களுக்கு ஒரு படம் பிடிக்கும்; எனக்கு வேறொரு படம் பிடிக்கும். நடிகர்களுக்கும் இது பொருந்தும். இது தனிப்பட்ட நபருடன் தொடர்புடைய விஷயமல்ல. பலரும் ‘ஜெய்பீம்’ திரைப்படம் விருது வெல்லும் என நினைத்தார்கள். ஆனால் விருது கிடைக்கவில்லை. அதேசமயம் மற்றவர்களுக்கு ஏன் விருது கொடுக்கப்பட்டது என்பது குறித்து விவாதமல்ல இது.

ஒருவர் விரும்பும் படம் விருது பெறாதபோது அது அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும் அவ்வளவுதான். அதற்காக விருது பெற்ற நடிகர் மீது அவர் ஏமாற்றத்தில் இருக்கிறார் என அர்த்தமில்லை. இதில் எந்த சர்ச்சையுமில்லை. அது வெறும் ஒரு ட்வீட் மட்டுமே. எங்களுக்குள் எந்த சர்ச்சையும் கிடையாது. சிலர் இதனை சர்ச்சையாக்க முயல்கின்றனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE