“சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று விஜய் கேட்டாரா?” - ராகவா லாரன்ஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து ‘சந்திரமுகி 2’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசினார். பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியது: “சூப்பர் ஸ்டார் பிரச்சினை இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டாருடன் என்னை இணைத்து பேசியதால், அதற்கு நான் விளக்கம் தர வேண்டி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டும் என்று விஜய் எப்போதாவது யாரிடமாவது கேட்டிருக்கிறாரா? அல்லது அவர் எங்காவது அறிவித்தாரா? நான் எப்போது விஜய்யை சந்தித்தாலும், அவர் என்னிடம் தலைவர் நன்றாக இருக்கிறாரா என்றுதான் முதலில் கேட்பார். விஜய்க்கு ரஜினி மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.

சூப்பர் ஸ்டாரை சந்தித்தபோது கூட 'பீஸ்ட்’ படம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. வசூல் நன்றாக இருப்பதாக சன் டிவியிலிருந்து சொன்னார்கள் என்று சொல்வார். அதனால் இந்த இருவருக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லோரும் இங்கு அண்ணன் - தம்பிகளாய் ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை பிரித்து விடாதீர்கள். இனி யாராவது வந்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால், 'தேங்காய் மரத்தில் தேங்காய்தான் முளைக்கும். மாங்காய் மரத்தில் மாங்காய் தான் முளைக்கும்' என்று பதில் சொல்லுங்கள்” என்று ராகவா லாரன்ஸ் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE