பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்...! - நவ்யா நாயர் கோபம்

By செய்திப்பிரிவு

தமிழில், அழகிய தீயே, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகை நவ்யா நாயர். தற்போது பண மோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறை வளையத்துக்குள் இவர் சிக்கியுள்ளார். சுங்கத் துறை கூடுதல் ஆணையர் சச்சின் சாவந்த், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நடிகை நவ்யா நாயருக்கு அவர் தங்க நகைகளைப் பரிசாக வழங்கியது தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ்யா நாயரை சந்திப்பதற்காக சச்சின் சாவந்த் 10 முறை கொச்சிக்குச் சென்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த நவ்யா நாயர், “சச்சின் சாவந்த் எங்கள் வீட்டுக்கு அருகே வசித்தபோது பழக்கம் ஏற்பட்டது. சச்சின் தனது பிறந்தநாளின் போது என் குழந்தைகளுக்கு சில தங்க நகைகளைப் பரிசளித்தார். அவர் குருவாயூர் கோயிலுக்குச் செல்ல நான் ஏற்பாடு செய்தேன். இதைத் தாண்டி எங்களுக்கு இடையே வேறு எந்த உறவும் இல்லை. இதை அமலாக்கத் துறையிடமும் தெரிவித்துள்ளேன்’ என்று நவ்யா நாயர் விளக்கம்அளித்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதையடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடனமாடும் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், ‘உங்களில் பாவம் செய்யாதவர்கள் முதல் கல்லை எறியட்டும்’ என்ற ஹேஷ்டேக்கை இணைத்துள்ளார். இது வைரலாகி வருகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE