பிரசாந்த் நீல் - பிரபாஸின் ‘சலார்’ ரிலீஸ் தேதி மாற்றம்?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ திரைப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இதில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது. இப்படம் ‘கேஜிஎஃப்’ யுனிவர்ஸின் ஓர் அங்கமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 6-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், படம் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால், படத்தை டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி இந்தச் செய்தி உறுதியாகும்பட்சத்தில் செப்டம்பர் மாதம் முழுவதையும் ஷாருக்கானின் ‘ஜவான்’ கைப்பற்றிக்கொள்ளும். ஏனெனினல், ‘ஜவான்’ செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. ‘சலார்’ வெளியீடு ஒருவேளை ஜவானின் வசூலை பாதிக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், சலார் தள்ளிப்போனால் ஷாருக்கான் குழுவினருக்கு கொண்டாட்டமாக அமையலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE