புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்ட ‘ஜவான்’ ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

துபாய்: உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் சென்னையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்தின் ப்ரிவ்யூ ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

இந்த நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று (ஆகஸ்ட் 31) இரவு 9 மணிக்கு ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் ஷாருக்கான், இயக்குநர் அட்லி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். ட்ரெய்லர் திரையிடலுக்குப் பிறகு அங்குள்ள ஏராளமான ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான் அவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார். ஷாருக்கானின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், அவரது படங்கள் வெளியாகும்போது அவர் பற்றிய காணொலி புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE