வீடியோ காலில் வாழ்த்திய கமல், அனிருத்துக்கு முத்தம்... - ஷாருக்கானின் ‘ஜவான்’ நிகழ்வின் ஹைலைட்ஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: ஷாருக்கானின் ‘ஜவான்’ பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களைப் பார்ப்போம்.

இந்த நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய், பாவனா தொகுத்து வழங்கினர். பாலிவுட் ‘பாட்சா’ ஷாருக்கான் அரங்கில் என்ட்ரி கொடுக்கும்போது ரசிகர்கள் ஆரவாரத்தில் கத்தி கூச்சலிட்டனர். அவர் அரங்கில் நுழைந்து ஒவ்வொருவரையும் கட்டியணைத்தார். விஜய் சேதுபதியை கட்டியணைத்தவர் அடுத்தாக நின்றிருந்த அனிருத்துக்கு முத்தத்தை பரிசளித்தார். யோகிபாபுவுக்கு ஒரு ஹக் கொடுத்தார். நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் வீடியோ கால் மூலமாக கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

முன்னதாக, விழாவில் பேசிய கலை இயக்குநர் முத்துராஜ், “கிட்டத்தட்ட 150 நாட்கள் சென்னையில் ‘ஜவான்’ படப்பிடிப்பு நடத்தினோம். இதனால் 3000-க்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைந்துள்ளது. சென்னையில் இவ்வளவு பெரிய ஷெட்யூலுக்கு சம்மதித்து, ஒத்துழைப்பு கொடுத்த ஷாருக்கானுக்கு நன்றி” எனக் கூறினார்.

யோகிபாபு பேசுகையில், “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த அட்லீ மற்றும் ஷாருக்கானுக்கு நன்றிகள். படத்தில் நடிக்க இந்தி கற்றுகொள்வது சற்று கடினமாகத்தான் இருந்தது. விஜய் சேதுபதிக்கும் எனக்கும் நன்றாக கெமிஸ்ட்ரி கைகொடுத்துள்ளது. தெறி படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தேன். எடிட்டர் ரூபன் தூக்கத்தில் என்னுடைய ஃபுட்டேஜ் தூக்கிவிட்டார் போல. ‘ஜவான்’ சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “என்னுடைய முதல் இந்தி படமே ஷாருக்கானுடன் அமைந்தது இறைவனின் செயல். இந்தப்படம் தமிழிலும் ஹிட்டாகும். இது இந்தி படமல்ல; இந்தியன் படம்” என பேசினார்.

நடிகை பிரியாமணி பேசுகையில், “இதற்கு முன்னால் பார்த்திடாத வித்தியாசமான தோற்றத்தில் நயன்தாரா இப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகை நான். இந்தப்படத்தில் நடிக்க காரணமாக இருந்த அட்லீக்கும், ஷாருக்கானுக்கும் நன்றி” என பேசினார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE