‘பயணிகள் கவனிக்கவும்’ இயக்குநரின் அடுத்த படைப்பு ‘அலங்கு’ முதல் தோற்றம்

By செய்திப்பிரிவு

‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘அலங்கு’. இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகி இருக்கும் திரைப்படம்தான் ‘அலங்கு’. கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும் , தமிழக பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம். அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத், சரத் அப்பானி, காளிவெங்கட், குணாநிதி உள்பட பலர் நடிக்கின்றனர்.

‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ படங்களை இயக்கிய சக்திவேல் இப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சபரிஷ், சங்கமித்ரா இருவரும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். "அலங்கு - என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும். இத்தகைய நாய், ராஜராஜ சோழனின் படையில் போர் நாயாக இருந்ததாக வரலாற்று சான்றுகளும், ஆய்வாளர்களும் கூறுகின்றன. ஆனால் கால போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும் மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் , நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தி இருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க வனம், வனம் சார்ந்த மக்கள் என படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு , கேரள மாநிலம் இடுக்கி, அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம், கோவை மாவட்டம் ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும். படத்தில் அதிக அளவில் வன விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து இப்படம் திரைக்கு வரும்" என படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE