பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020-ம் ஆண்டு, மும்பை பாந்த்ராவில் உள்ள மான்ட் பிளாங் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைவு, இந்தி திரையுலகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட வீட்டுக்கு யாரும் வாடகைக்குக் கூட வரவில்லை என்று சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது.
அந்த வீட்டை, நடிகை அடா சர்மா இப்போது வாங்கியுள்ளார். இதை அவருக்கு நெருக்கமானவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி அடா சர்மாவிடம் கேட்டபோது, “எல்லாம் இறுதி செய்யப்பட்டதும் அதை மீடியாவிடம் தெரிவிப்பேன்” என்றார்.
இந்தி நடிகையான அடா சர்மா தமிழில், சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். ‘சார்லி சாப்ளின் 2’ படத்திலும் நடித்திருந்த அவர், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் மூலம் பிரபலமடைந்துள்ளார். இப்போது சில இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.