அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாத திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்திருந்தனர். அந்தப் பேட்டியில், பிரபல சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இவர்கள் மீதும் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா மறைவுக்குப் பின்னர், அவருடைய மகன் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கு ஆர்.கே.செல்வமணியோ, அவரது தரப்பு வழக்கறிஞரோ ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆர்.கே.செல்வணிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE