‘கிக்’ எனக்கே வித்தியாசமான படம்: சந்தானம்

By செய்திப்பிரிவு

சென்னை: பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார். தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ராகிணி திவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா, முத்துக்காளை உட்பட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். செப்.1-ம் தேதி வெளியாகும். இந்தப் படம் பற்றி செய்தியாளர்களிடம் சந்தானம் கூறியதாவது:

தயாரிப்பாளர் நவீன் ராஜும், இயக்குநர் பிரசாந்த்ராஜும் புதுச்சேரி வந்து கதை சொன்னார்கள். படத்தின் கதையைப் போல அவர்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரே கட்டமாக சென்னையில் ஆரம்பித்து பாங்காங்கில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். இதுவரை நான் நடித்த படங்களில் எனக்கே வித்தியாசமான படமாக இது இருக்கிறது. ஒரு பொண்ணுக்கும் பையனுக்குமான காதல் ஈகோ என்கிற கான்செப்ட்டில் தான் இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஹீரோயின் தான்யா ஹோப், ஒரு பாடலில் குதிரையில் ஏறிச் செல்வது போல் காட்சி. பாங்காக்கில் படமாக்கப்பட்டது. தான்யாவுக்கு குதிரையேற்றம் நன்றாகத் தெரியும். ஆனால் படப்பிடிப்புக்கு வந்த குதிரை தாய்லாந்து மொழியில் பேசினால்தான் கேட்கும். தான்யா ஏறினால் தள்ளிவிட்டுச் சென்றுவிடும். பிறகு அந்தக் காட்சியை மாற்றி எடுத்தோம். இந்தப் படத்தை ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தோடு ஒப்பிட வேண்டாம். அது ஹாரர் காமெடி. இந்த ‘கிக்’ வேற மாதிரி இருக்கும். இது சந்தானம் படம் என்று சொல்வதை விட இயக்குநர் பிரசாந்த்ராஜ் படம் என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு சந்தானம் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE