“உனக்கு சினிமாவில் நடிக்க தகுதியே இல்லன்னாங்க...” - நடிகர் வடிவேலு பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: “சிறிது நாட்களுக்கு முன்னால் என்னை வரவிடாமல் கதவை பூட்டுப் போட்டு சாவியை தூக்கிவிட்டு போயிவிட்டார்கள். உனக்கு சினிமாவில் நடிக்க தகுதியே இல்லை என்று சொன்னார்கள்” என நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.

பி.வாசுவின் ‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் வடிவேலு, “ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும்போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை.

முதலில் ஒரு விஷயத்தை சொல்லிவிடுகிறேன். சிறிது நாட்களுக்கு முன்பு என்னை வரவிடாமல் கதவைப் பூட்டுப் போட்டு சாவியை தூக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். உனக்கு சினிமாவில் நடிக்க தகுதியே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதுக்கு என்ன காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவியை கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் சுபாஷ்கரன். தெய்வத்துக்கு பிறகு தெய்வமா சுபாஷ்கரனைத் தான் வணங்குகிறேன்.

சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE