அஜித்தின் ‘விடாமுயற்சி’ எங்களுக்கு முக்கியமான படம்: வதந்திகளுக்கு ‘லைகா’ முற்றுப்புள்ளி

By செய்திப்பிரிவு

சென்னை: “விடாமுயற்சி எங்களுக்கு மிக முக்கியமான திரைப்படம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்” என லைகா நிறுவனர் சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகர் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகின. இதையடுத்து விஜய் ‘லியோ’ படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த படத்துக்கே தயாராகிவிட்டார். ஆனால் ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித்தின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

லைகா தயாரிக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என தெரிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது. மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘விடாமுயற்சி’ என பெயரிடப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதையடுத்து இப்படத்திலிருந்து தயாரிப்பு நிறுவனமான லைகா விலக உள்ளதாக தகவல் பரவியது. மேலும், இப்படம் கைவிடப்பட்டதாகவும் வதந்திகள் பரவின.

இப்படியான சூழலில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட்25) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய லைகா தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் சுபாஸ்கரன், “விடாமுயற்சி எங்களுக்கு முக்கியமான படம். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். இனி தாமதமாகாது” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE