ரஜினியின் பெயரை கெடுத்துவிடக் கூடாது என பயந்துகொண்டே நடித்தேன்: லாரன்ஸ் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவரது பெயரை கெடுத்துவிடக் கூடாது என்று பயந்து கொண்டேதான் நடித்தேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நேற்று (ஆக 25) சென்னையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இதில் படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் பேசியதாவது: “இந்தப் படத்தின் கதையை பி.வாசு என்னிடம் சொன்னபோதே எனக்கு பிரம்மாண்டம்தான் தெரிந்தது. இந்தப் படம் தொடங்கி முடியும் வரை ரஜினி சாரின் ஆசிர்வாதம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவர் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவரது பெயரை கெடுத்துவிடக் கூடாது என்று பயந்து கொண்டேதான் நடித்தேன்” இவ்வாறு அவர் கூறினார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE