‘ஜெயிலர்’ படத்துக்கான யு/ஏ சான்றிதழை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள ‘யு/ஏ’ சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனுவை வாபஸ் பெற அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், "நடிகர் ரஜினி நடித்து ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளன. வன்முறை காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ள இப்படத்துக்கு 12 வயதுக்கு குறைவானவர்களைப் பார்க்க அனுமதிக்கும் வகையிலான "யுஏ" சான்றிதழ் வழங்கியிருப்பது தவறானது. எனவே, இப்படத்துககு வழங்கியுள்ள அச்சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, இந்த திரைப்படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார். அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "லட்சக்கணக்கான பேர் திரைப்படத்தை கண்டுள்ளனர். 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட வேண்டிய இந்தத் திரைப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தப் படத்தில் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து திரைப்படங்களிலும் வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எந்த திரைப்படத்தில் வன்முறை அதிகமாக உள்ளது, எந்த திரைப்படத்தில் குறைவாக இருக்கிறது என்று எப்படி வகைப்படுத்த முடியும்? என கேள்வி எழுப்பினார்.

பின்னர், இது பொதுநல வழக்கு அல்ல. விளம்பர நல வழக்கு எனக் கூறி, உத்தரவு பிறப்பிக்கத் துவங்கிய நிலையில், மனுதாரர் தரப்பில், மனுவைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE