“நகைச்சுவை புரியாமல் ட்ரோல் செய்பவர்களே...” - பிரகாஷ்ராஜ் மீண்டும் பதில்

By செய்திப்பிரிவு

“இன்னும் நகைச்சுவையை புரிந்துகொள்ளாமல் ட்ரோல் செய்பவர்களே” என நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மலையாளி டீ கடைக்காரருக்கு என்ன நடந்தது என இன்னுமே நகைச்சுவையை புரிந்துகொள்ளாமல் கேட்கும் ட்ரோலர்களே... அவர் உங்களைப் போல அல்ல. அவர் மிகவும் புத்திசாலி. அவர் தனது கிளைகளை செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு விரிவுபடுத்தியுள்ளார். புளூட்டோவிலும் விரைவில் கடையை திறக்க உள்ளார். உங்களால் முடிந்தால் அவரை பிடித்துகொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தப் பதிவில் சர்ச்சையான முந்தைய கேலிசித்திரத்தையே மீண்டும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பனியன், லுங்கி அணிந்த நபர் ஒருவர் கோப்பையில் இருந்து தேநீர் ஊற்றுவது போல் ஒரு கேலிச் சித்திரம் ஒன்றை பகிர்ந்திருந்தார். கூடவே "நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தார். சந்திரயான்-3 மிஷனை ட்ரோல் செய்யும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்த இந்த கருத்தால் நெட்டிசன்கள் கொந்தளித்தனர்.

நெட்டிசன்களின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், "வெறுப்பு எப்போதும் வெறுப்பை மட்டுமே காணும். ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து ஜோக் ஒன்றை சுட்டிக்காட்டியே நான் பதிவிட்டிருந்தேன். கேரள தேநீர் விற்பனையாளர்களை பகடி செய்யும் நகைச்சுவை அது. உங்களுக்கு ஒரு நகைச்சுவையைக் கூட ரசிக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் வளருங்கள்" என்று கூறி இருந்தார்.

மற்றுமொரு ட்வீட்டில் மலையாளி சாய்வாலா பற்றிய காமெடி குறித்து எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாதோர் இந்த வலைப்பதிவில் படித்துத் தெரிந்து கொள்ளவும் என்று கூறி பகிர்ந்திருந்தார். இதனிடையே, கர்நாடகாவில் இந்து அமைப்பினர் கொடுத்த புகாரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நேற்று (ஆகஸ்ட் 23) சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது குறித்து அவர் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில், “இந்தியாவுக்கும் மனித குலத்துக்கும் பெருமையான தருணம். நன்றி இஸ்ரோ. சந்திரயான் 3 திட்டத்தில் பங்களித்த அனைவருக்கும் நன்றி. இது நமது பிரபஞ்சத்தின் மர்மத்தை ஆராய்வதற்கும் கொண்டாடுவதற்கும் நமக்கு வழிகாட்டட்டும்” என பதிவிட்டிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE