‘ரஜினிகாந்த் 170’ படப்பிடிப்பு செப்டம்பரில் தொடக்கம்?

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மூன்றாவது வாரம் முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான இந்தப் படம் பலத்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதுவரை இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.500 கோடி வசூலித்துள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்க இருக்கிறது. இதில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் சர்வானந்த் ஆகியோர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்க இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் பூஜை அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் இப்படத்துக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ’ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE