திரைத் துறையில் 35 ஆண்டுகள் - சல்மான் கானுக்கு ரசிகர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் திரையுலகில் 35 ஆண்டுகளைக் கடந்துள்ளார். இதையொட்டி, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் ரசிகர்களால் ‘பாய்’ (அண்ணன்) என அன்புடன் அழைக்கப்படுபவர் சல்மான் கான். அண்மையில் அவரது நடிப்பில் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ படம் வெளியானது. அடுத்து தீபாவளிக்கு ‘டைகர் 3’ படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் சல்மான் கான் இன்றுடன் திரைத் துறையில் 35 ஆண்டுகளை கடந்துள்ளார்.

கடந்த 1988-ஆம் ஆண்டு வெளியான ‘பிவி ஹோ தோ ஐசி’ (Biwi Ho Toh Aisi) படம் மூலமாக திரைத் துறையில் அடியெடுத்து வைத்தவர் சல்மான் கான். இப்படம் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகள். தொடக்கத்தில் காதல் படங்களால் தனது கரியரை அமைத்தவருக்கு 1993-ல் வெளியான ‘ஹம் ஆப்கே ஹை கோன்’ மிகப் பெரிய புகழையும் அடையாளத்தையும் தேடித்தந்தது. இன்றளவுக்கும் அந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுவதுடன், படத்தையும் ‘க்ளாஸிக்’ என ரசிகர்கள் புகழ்கின்றனர்.

ஏராளமான படங்களில் அவர் நடித்திருந்தாலும், கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் கபீர்கான் இயக்கத்தில் வெளியான ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடியை வசூலித்து மெகா ஹிட்டானது. படத்தின் பட்ஜெட் என்னமோ 70 கோடிதான். அடுத்து வந்த அவரின் ‘சுல்தான்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்து அவரின் ‘டைகர்’ படத்துக்காக ரசிகர்கள் காத்துகொண்டிருக்கின்றனர். மேலும் திரையுலகில் 35 ஆண்டுகளை நிறைவு செய்த சல்மான் கானுக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE