கோவை: “நடிகர் விஜய்யின் ‘குஷி’ படத்தை ரசித்தது போல என் படத்தையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்” என்று நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
தனது ‘குஷி’ படத்தின் புரமோஷனுக்காக கோவை வந்திருந்தவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “செப்டம்பர் 1-ம் தேதி என்னுடைய ‘குஷி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஃபேமிலி என்டர்டெயினராக படம் உருவாகியுள்ளது. நீங்கள் ரசிக்கும் படமாக இது இருக்கும். மிஸ் பண்ணிடாதீங்க. காதல் அதன்பிறகு நடைபெறும் திருமணம் அதில் வரும் சிக்கல்கள் என எல்லோருக்கும் கனெக்ட் ஆகும் படமாக ‘குஷி’ இருக்கும்.
நடிகர் விஜய்யின் ‘குஷி’ திரைப்படம் தமிழ், தெலுங்கில் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. படம் வெளியான சமயத்தில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், தற்போது வெளியாக இருக்கும் என்னுடைய ‘குஷி’ படத்தின் கதை வேறு. படத்துக்கு சரியாக இருக்கும் என்பதால் இந்த டைட்டிலை பயன்படுத்தினோம். விஜய்யின் ‘குஷி’ படத்தை ரசித்தது போல, விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.
சமந்தா அட்டகாசமான நடிகை. அவரின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். நான் கல்லூரி படிக்கும்போதே அவர் நடிக்க வந்துவிட்டார். ‘நீ தானே என் பொன் வசந்தம்’ போன்ற படங்களையெல்லாம் பார்த்து நான் அவருக்கு ரசிகன் ஆகிவிட்டேன். அப்படி நான் பார்த்து ரசித்த ஒருவருடன் இணைந்து படம் நடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை பார்த்தீர்களா? என கேட்டபோது, “நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. பார்ப்பேன். அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருவதாக அறிகிறேன். தற்போது ரூ.500 கோடியை வசூலித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படக்குழுவுக்கு வாழ்த்துகள். விரைவில் ஒரு ப்ரேக் எடுத்துவிட்டு முதல் படமாக இதனை பார்ப்பேன்” என்றார்.