“காமெடி மட்டுமல்ல... உங்களால் எதுவும் முடியும்!” - யோகிபாபுவுக்கு துல்கர் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: யோகிபாபு தனக்கு பிடித்த நடிகர் மட்டுமல்ல மிகச்சிறந்த மனிதர் என்று நடிகர் துல்கர் சல்மான் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான் இப்போது ‘கிங் ஆப் கோதா’ படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர் கல்லரக்கல், செம்பன் வினோத் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம், 24-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார் துல்கர். இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் இப்படம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பேட்டியளித்துள்ளனர். அதில் உங்களுக்கு பிடித்த காமெடி நடிகர் என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல் யோகி பாபு என்று பதிலளித்தார் துல்கர் சல்மான்.

மேலும் பேசிய அவர், “யோகிபாபு ஒரு மிகச்சிறந்த மனிதர், எப்போதும் எனக்கு மெசேஜ் செய்து நான் எப்படி இருக்கிறேன்? என் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள்? என்று விசாரித்துக் கொண்டே இருப்பார். அப்படி செய்யவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அவர் மிகவும் ஜாலியான, பழகுவதற்கு சுலபமான மனிதர்” என்று கூறியிருந்தார்.

இந்த காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள யோகி பாபு, “உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி துல்கர் சார். உங்களுடன் இணைந்து நடிக்கவும், காமெடி செய்யவும் ஆவலாக இருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். யோகிபாபுவின் இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள துல்கர் சல்மான், “காத்திருக்கிறேன் சார். காமெடி மட்டுமல்ல. உங்களால எதுவும் முடியும். எந்த வகையான படத்திலும் உங்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்குப் பிடித்த மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE