தமிழில், சூர்யாவின் வாரணம் ஆயிரம், அஜித்தின் அசல், மாதவன் நடித்த வேட்டை, விஷாலின் வெடி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை சமீரா ரெட்டி. 2014-ம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டார். பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட அவர், தனது 2 குழந்தைகளைக் கவனித்து வருகிறார். இவர் முதல் குழந்தை பிறந்த பிறகு, தனது உடல் மாற்றங்கள் பற்றி பலர் பேசியதாகக் கூறியிருந்தார். காய்கறி வியாபாரி ஒருவர் அப்படி கூறியதாகத் தெரிவித்திருந்தார். இப்போதைய பேட்டியில், உருவக் கேலி இப்போதும் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.
“சமீபத்தில் விமான நிலையம் சென்றிருந்தேன். அங்கிருந்த பாதுகாவலர் எனது ஆதார் கார்டை பரிசோதனை செய்த போது, ‘உங்கள் உடல் ரொம்ப மாறிவிட்டது’ என்றார். இது ஒரு வகையில் உருவக் கேலிதான். இங்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறார்கள். ஒரு பெண்ணின் உடலைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதை தங்களின் பிறப்புரிமை என்று நினைக்கிறார்கள். இதைக் கடந்துதான் நாம் செல்கிறோம்.
‘திரைப் படங்களின் மூலம் உருவாக்கிய பிம்பத்தைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் அந்த அறியாமைதான் அப்படி எதிர்பார்க்க வைக்கிறது. அதை மன்னித்து கடந்து செல்லவேண்டும்’ என்று என் கணவர் சொல்வார். அப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறேன்” என்று சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.