’பாகுபலி’யில் ஏற்பட்ட விபத்து: பிரபாஸுக்கு மூட்டு அறுவை சிகிச்சை

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ’பாகுபலி’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் பிரபாஸின் மூட்டுப் பகுதியில் காயமடைந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். ‘பாகுபலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். தற்போது நாக் அஸ்வின் இயக்கும் ‘கல்கி 2898 ஏடி’, பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘லியோ’ படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படம் ஒன்றிலும் பிரபாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘பாகுபலி’ படப்பிடிப்பில் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்த போது பிரபாஸின் கால் மூட்டுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சில நாட்கள் ஓய்வில் இருந்த அவர் பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சில மாதங்களுக்குப் பிறகு மூட்டுப் பகுதியில் வலி ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவரிடம் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். தொடர்ந்து படப்பிடிப்புகள் இருந்ததால் அறுவை சிகிச்சையை பிரபாஸ் தள்ளிவைத்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு வலி அதிகமாக இருப்பதால், விரைவில் அவருக்கு மூட்டு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் மாதம் வரை உள்ள படப்பிடிப்பு பணிகளை முடித்து விட்டு டிசம்பரில் இந்த அறுவை சிகிச்சையை அவர் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE