சென்னை: “ஒரு நடிகனாக நான் உருவான ஆரம்ப காலக்கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. மிஸ் யூ சார்” என மறைந்த இயக்குநர் சித்திக் குறித்து நடிகர் சூர்யா உருக்கமாக நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “நினைவுகள் என் மனதை கனமாக்கியுள்ளன. சித்திக்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். இந்த துயரமான தருணத்தில் உங்கள் அனைவருடனும் நான் நிற்கிறேன். ‘பிரண்ட்ஸ்’ படம் பல்வேறு வழிகளில் எனக்கு முக்கியமான படம். சிறிய காட்சியில் நடிப்பில் முன்னேற்றம் தெரிந்தாலும் உடனே பாராட்டி ஊக்கமளிக்கும் இயல்பு கொண்டவர் சித்திக். படப்பிடிப்பின் போதும் சரி, எடிட் செய்யும் போதும் சரி, எனது நடிப்பு குறித்த தனது எண்ணங்களை மிகுந்த அன்புடன் பகிர்ந்துகொள்வார்.
ஃபிலிம் மேக்கிங்கை ரசிக்கவும், சிரிக்கவும், எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடக்கவும் சொல்லிக்கொடுத்தார். ‘பிரண்ட்ஸ்’ படம் எடுக்கும் காலக்கட்டத்தில் சீனியர் மற்றும் புகழ்பெற்ற இயக்குநராக இருந்த சித்திக் தன்னுடையை நட்பார்ந்த அணுகுமுறையால் அனைவரையும் சமமாக நடத்துவார். படப்பிடிப்பு தளத்தில் அவர் கோபமடைந்தோ, குரலை உயர்த்தியோ நான் பார்த்தில்லை. அவருடன் பணிபுரிவது என்றென்றும் எனக்கு விருப்பமான ஒன்று. என்னையும் என் திறமையையும் நம்ப வேண்டும் என்ற தன்னம்பிக்கையை எனக்கு கொடுத்தார். எப்போது சந்தித்தாலும் என்னுடைய குடும்பத்தை பற்றி அக்கறையுடன் விசாரிப்பார்.
ஒரு நடிகனாக நான் உருவான ஆரம்ப காலக்கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. மிஸ் யூ சார். நீங்கள் எங்களுக்கு அளித்த நினைவுகளும் அன்பும், எங்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும்” என பதிவிட்டுள்ளார்.