புகழஞ்சலி | “சாமானியனின் கதைகளை திரையில் பிரதிபலித்தவர் சித்திக்” - மோகன்லால்

By செய்திப்பிரிவு

பிரபல இயக்குநர் சித்திக் மறைவுக்கு மலையாளத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மம்மூட்டி: “நேசிப்பவர்களின் தொடர் இழப்புகளால் தாங்க முடியாத வலியை அனுபவிக்கிறேன். சித்திக்குக்கு என் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

மோகன்லால்: “என் அன்பான சித்திக்கின் மறைவை என்னால் நம்ப முடியவில்லை. இயல்பான நகைச்சுவை மற்றும் சாமானியர்களின் வாழ்க்கை சிக்கல்களை கதைகளாக உருவாக்கிய சித்திக் உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்கு ஃபேவரைட். அவரின் பிரிவை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. பல்வேறு கதைக்களங்களில் ஈர்க்கும் இயக்கத்தால் லட்சக்கணக்கான ரசிகர்கள் சித்திக்கின் ஒவ்வொரு படத்துக்காகவும் காத்திருப்பார்கள். சித்திக் நம்மை நிறையவே சிரிக்க வைத்தார்; அழ வைத்தார், நம்பிக்கையை இழக்க வேண்டாம் என நினைவூட்டினார்.

தனது திறமையால் உச்சத்தை அடைந்து நம் எல்லோருக்கும் முன்னுதாரணமான திகழ்ந்தார். ஆடம்பரத்தை விட்டுவிட்டு, வார்த்தையிலும் நடத்தையிலும் மென்மையாக, யாரிடமும் விரோதம் காட்டாமல் சாதாரண மனிதனாக வாழ்ந்தவர் சித்திக். அவரது இயக்கத்தில் ‘பிக் பிரதர்’ படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம். சினிமாவிலும் வாழ்க்கையிலும் சித்திக் எனக்கு பிக் பிரதர் தான். வலியுடன் இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

துல்கர் சல்மான்: “மென்மையானவர். அன்பான மனிதர். திறமையான எழுத்தாளர்/ இயக்குநர். அவரின் மென்மையான நடத்தைக்குப் பின்னால் அட்டகாசமான நகைச்சுவை மறைந்திருக்கும். ஐகானிக் படங்களை கொடுத்தவர். அவரின் மறைவு உண்மையில் பேரிழப்பு. சித்திக்கின் குடும்பம் மற்றும் அவரது அன்புக்குரியவர்கள் வலிமை பெற பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

நஸ்ரியா: “அவரையும் அவரது சிரிப்பையும் இனிமேல் பார்க்க முடியாது என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என இன்ஸ்டராகிராமில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE