“இந்தி திரைப்படங்கள் மட்டுமே ‘பாலிவுட்’ அல்ல” - ஏ.ஆர்.ரஹ்மான்

By செய்திப்பிரிவு

சென்னை: “பாலிவுட் என்றால் இந்தி திரையுலகம் மட்டும்தான் என்று உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. அது ஹாலிவுட் என்ற வார்த்தையிலிருந்து வந்தது” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில் கூறியது: “பாலிவுட் என்றால் இந்தி திரையுலகம் மட்டும்தான் என்று உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. தெலுங்கிலிருந்து ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தெருகிறது. பாலிவுட் என்ற வார்த்தையை நான் பயன்படுத்துவதில்லை. அது ஹாலிவுட் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. பாலிவுட் என்று யாராவது பயன்படுத்தினால் அதை நான் திருத்துவேன்.

இங்கு அற்புதமான திறமைசாலிகள் இருப்பது உலகத்துக்கு தெரியவேண்டியது மிக முக்கியம். அவர்களுக்கு பண உதவியும், வெளிச்சமும் கிடைத்தால் அவர்கள் நல்ல படைப்புகளுடன் மேலே வருவார்கள். அந்தப் படைப்புகள் இந்தியா போன்று பலதரப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தியா என்பது ஒரு கலாசாரம் அல்ல. வானவில் போல பல கலாசாரங்கள் இணைந்ததே இந்தியா.

திரைப்படங்களுக்கு இசையமைத்தால்தான் அப்படியான உதவிகள் கிடைக்கும் என்பதை ‘ரோஜா’ வாய்ப்பு கிடைக்கும் முன்பு தான் நான் உணர்ந்து கொண்டேன். என்னுடைய குருவாகவும் நண்பராகவும் இருக்கும் மணிரத்னம், ஷங்கர், ராம்கோபால் வர்மா, சுபாஷ் கை போன்றவர்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்” என்று ரஹ்மான் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE