நாளை ‘ஜெயிலர்’ வெளியாகும் நிலையில் இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்

By செய்திப்பிரிவு

சென்னை: ’ஜெயிலர்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டுச் சென்றார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படம் வரும் நாளை (ஆக.10) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா பரவலால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை செல்கிறேன். ‘ஜெயிலர்’ படம் எப்படி இருக்கிறது என்று திரையரங்குகளில் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்” என்றார்.

ரஜினிகாந்த் அவ்வப்போது இமயமலைக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ரஜினி இமயமலை பயணத்தை தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE