சென்னை: நடிகர் கிச்சா சுதீப்பின் 46 வது படத்தை தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். விஜய் கார்த்திகேயா இயக்கும் இந்த இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு, இப்போது மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இதற்காக இதுவரை இந்திய சினிமாவில் அமைக்கப்படாத வகையில் பிரம்மாண்ட போலீஸ் ஸ்டேஷன் செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் பற்றி நடிகர் சுதீப் கூறும்போது, “கிட்டதட்ட 2 வருடத்துக்குப் பிறகு கேமரா முன் நிற்கிறேன். படப்பிடிப்பு நாள் நெருங்க நெருங்க பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நடிப்பு மறந்துவிட்டது. மூத்த நடிகர்கள் முன் தடுமாறி விடுவேனோ என்று பயந்தேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்த மாத இறுதிவரை இங்கு படப்பிடிப்பு நடக்கிறது. சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் இணைகிறேன். முக்கியமான காட்சிகளை புதுச்சேரியில் படமாக்குகிறோம். இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்றார்.
சுதீப் தமிழில் ‘நான் ஈ’, ‘புலி’, ‘முடிஞ்சா இவனப்புடி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் நடித்த ‘விக்ராந்த் ரோணா’ தமிழிலும் வெளியானது.